Sunday, June 12, 2011

மூன்று குற்றங்கள்.


வியாசர் தான் செய்த மூன்று குற்றங்களுக்காகத் தன்னை மன்னிக்கும்படி இறைவனிடம் வேண்டினார்.
என்ன அந்த மூன்று குற்றங்கள்?

அவர் வேண்டுதல்:
1.இறைவனே,நீங்கள் உருவமற்றவர்,ஆனால் எனது தியானத்தில் 
   நான் உங்களை உருவம் கொண்டவராகப் பாவித்து தியானம் செய்கிறேன்.
 
2."நீங்கள் வாக்கிற்கும்,மனதிற்கும் எட்டாதவர்."ஆனால் உங்கள் மீது தோத்திரங்கள் பாடியுள்ளேன்.
 3."நீங்கள் எங்கும் வியாபித்திருப்பவர்."ஆனால்,நானோ பல 
திருத்தலங்களுக்கும் யாத்திரை சென்று உங்களை வழிப்பட்டு வணங்கி இருக்கிறேன்.

"என் மீது கருணை கூர்ந்து என்னுடைய இந்த மூன்று
குற்றங்களையும் மன்னித்து எனக்கு அருள் புரியும்படி வேண்டுகிறேன்."

ஞானத்தின் தன்மையை உணர்ந்த ஞானிகளால் தான் இந்த வார்த்தைகளை 
கூறமுடியும்.

எங்கும் நீக்கமற நிற்கின்ற பரம்பொருளை ஒரு வடிவத்துள்லோ அல்லது 
ஒரு எல்லையுள்லோ கற்பிப்பது மடமை.அது,இது என வார்த்தைகளால் 
சுட்டிகாட்டுவதற்கு இயலாததாகவும்,மனம் தோன்றும் இடத்திற்கு 
அப்பால் உள்ளதாலும்,எண்ணத்திற்கு  எட்டா பொருளாதலாலும்,அத்தகைய 
இறையை இலக்கணத்திற்கு உட்படாததையே இலக்கணமாக கொண்ட பொருளை

ஆரம்பநிலையில் பாமரரும் புரிந்து உணரும் வண்ணம் சுட்டி அறியத்தக்க மனதிற்கு எளிமையாக ஞானிகள் வார்த்தைகளாலும்,வடிவங்களாலும் படைத்தனர்.

மேம்பட்ட புரிதல் இல்லையென்றால் அதுவே பாதகமானதையும் உணர்ந்தனர்.
இதை கருத்தில் கொண்டே வியாசர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

சிறுகுழந்தைக்கு புலியை எவ்வாறு கற்பிப்பார்கள்.முதலில் வார்த்தையால் புலி என்று கூறுவார்கள்.பின்னர் அதன் படத்தை காட்டுவார்கள்.உண்மையில் அந்த வார்த்தையோ, 
அந்த படமோ புலி அல்ல.ஆரம்பத்தில் புரிந்துக் கொள்வதற்கே அவை அவ்வாறு கற்பிக்கப்பட்டது.

Download As PDF

No comments: