Wednesday, December 28, 2011

இங்கு எல்லாம் நானே!



"நான்" ஓர் அறிமுகம்.

நான் பார்க்கிறேன்.ஆனால் நான் கண்ணல்ல!
நான் கேட்கிறேன்.ஆனால் நான் காதல்ல!
நான் முகர்கிறேன்.ஆனால் நான் மூக்கல்ல!

நான் சுவைக்கிறேன்.ஆனால் நான் நாக்கல்ல!
நான் உணர்கிறேன்.ஆனால் நான் சரீரமல்ல!
நான் நினைக்கிறேன்.ஆனால் நான் மனமல்ல!
புலனும்,மனமும் என்னையே ஆதாரமாக கொண்டு பிரகாசிக்கின்றன.


நான் இருக்கிறேன்...............
என்பதை உணர மேற்கண்ட ஏதும் தேவை இல்லை.


என் இருப்பு ஒன்றே போதுமானது!
என்னை தேடாதே!
ஏனெனில் உன் தேடுதலே-
நானாய் இருக்கிறேன்.

Download As PDF

Wednesday, December 14, 2011

நட்பும், நட்புணர்வும் அன்பின் மிக சிறந்த நறுமணமாகும்.



நட்புணர்வு என்பது யாரைக் குறித்துமான,
யாரை நோக்கியுமான அன்பு அல்ல. அது பேச்சாலோ
அல்லது வேறு விதத்திலோ செய்துகொண்ட எந்த ஒப்பந்தமும் அல்ல.

அது ஒருதனிநபருக்கும் மற்றொரு தனிநபருக்கும் இடையே ஆனதல்ல.
மாறாக அது ஒரு தனிநபருக்கும் முழு இயற்கைக்குமானது.
மேலும் அதில் மரங்களும் விலங்குகளும் நதிகளும் மலைகளும்
விண்மீன்களும் அடங்கும். எல்லாமே நட்புணர்வுக்குள் அடங்கி விடுகிறது.

உனது மௌனம் வளர்வதைப் போலவே உனது நட்புணர்வும் வளரும்,
உனது அன்பும் நேசமும் பிரியமும் வளரும்.பொறாமை மறையும்
போது அங்கு ஆழமான நட்புணர்வு மலரும்.

வாழ்வு ஒரு கண்ணாடி, அதனுடன் நட்புணர்வு கொள் –
வாழ்வு அனைத்தும் நட்புணர்வையே பிரதிபலிக்கும்.

நட்பும், நட்புணர்வும் அன்பின் மிக சிறந்த நறுமணமாகும்.
மனதுடன் நட்பு கொள், அதை ஆழ்ந்த நட்புணர்வுடன் கவனி.

நட்புணர்வு எதையும் எதிர்பார்ப்பதில்லை, 
அது எந்த விதத்திலும் கட்டாயப்படுத்துவதில்லை.
Download As PDF

சிந்தித்து தெளிந்து இரண்டற கலப்பதுவே முக்தியாம்.





என்னை அறிவென்றான் என் அறிவில் ஆனந்தந்
தன்னைச் சிவமென்றான் சந்ததமும் – என்னைஉன்னிப்
பாரா மறைத்ததுவெ பாசமென்றான் இம்மூன்றும்
ஆராயந் தவர்முத்த ராம்.-சிவபோக சாரம் 


என் உடல்,என் மனம் என்னும் இவை என் உடைமைகள் அன்றி நானில்லை.
எங்கே எனது என்று பகுக்க முடியாமல் அறியும் இந்த "நான்" மட்டும்
எஞ்சி இருக்கிறதோ அந்த அறிவே நீயாம்!

நான் என்ற இந்த அறிவும் (நினைவும்) தோன்றி மறைவதால்,
(நினைப்பும்,மறப்புமாய் இருப்பதால்)-அதன் தோற்றதிற்கும்,மறைவிற்கும்
ஆதாரமான ஒரு பொருள் இருக்கவேண்டும்.அறிவிற்கறிவான அந்த
ஆதாரநிலையே ஆனந்தமயமான சிவமாம்.
(இன்பதுன்பமற்ற நிலையே ஆனந்தம்).

அறிவான தன்னையும்,தனக்கு ஆதார தலைவனையும் மறைப்பதுவே
ஆணவமாகிய இருளாம்.ஆணவம்,கன்மம்,மாயை இவையே பாசமாம்.

அறிவாகிய தன்னையும்,
இந்த நினைவிற் ஆதார அறிவையும்,
இவ்விரண்டையும் அறிய ஒண்ணாது மறப்பது
ஆகிய இம்மூன்றையும் சிந்தித்து தெளிந்து இரண்டற கலப்பதுவே முக்தியாம்.
Download As PDF

Friday, December 2, 2011

தன் உணர்வு

தன்னுணர்வு.

அடையவேண்டிய எல்லாவற்றிலும் தன் உணர்வுக்கு
மேலான பொருள் ஒன்று இல்லை.தன்னுணர்வுக்கு
அந்நியமாய் அறியப்படும் யாவும் வீணே!


ஆதலால் தன்னுணர்வுக்கு
அந்நியமாய் உள்ளதை நீக்கி தானேயான
அந்த உணர்வுடன் இருப்பதே மேலானதாகும்.



அதுவே உண்மையான தியானமாகும்.
Download As PDF

Sunday, November 27, 2011

எண்ணங்களில் விழிப்பாய் இருங்கள்!



எண்ணம்,சொல்,செயல் இம்மூன்றும் மனிதனுக்கு கிடைத்த மாபெரும் கொடை.
சொல்லுக்கும்,செயலுக்கும் எண்ணமே முதல் காரணம்.

உங்களின் சொல்லையும்,செயலையும் நிர்ணயப்பது
உங்களின் எண்ணமே!எண்ணங்களாலேயே மனிதன் உயர்வடைகிறான்.

சுயநலமற்ற எண்ணமும்,சொல்லும்,செயலும் என்றும் நல்லவையே!

நல்லதையே எண்ணுங்கள்.எண்ணுவதையே சொல்லுங்கள்.
சொல்வதையே செய்யுங்கள்!ஒரு மனிதனுக்கு இம்மூன்றும் ஒரு நேர்கோட்டில் 
அமையுமானால் வாழ்க்கை இயல்பாக அமையும்.

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்கள்.
எண்ணத்தில் தூய்மையும்,தெளிவும் இல்லாவிட்டால்
அதை தொடர்ந்த சொல்லும்,செயலும் துன்பத்தையே தரும்.

எண்ணம் ஒன்றும்,சொல் ஒன்றும்,செயல் ஒன்றும்
இருப்பவர்கள் வாழ்க்கையில் கடைசிவரை நடித்துக்
கொண்டுத்தான் இருக்கவேண்டும்.அவருக்கே அவர் புதிராகி போவார்.

ஆக உங்களின் எண்ணங்களில் விழிப்பாய் இருங்கள்!
Download As PDF

Saturday, November 26, 2011

உலகம் அன்புமயமானது!



அன்பும்,கருணையும் மனிதனின் இயற்கை குணங்கள்.

அது ஒருவர் மீது மட்டும் வெளிப்படும்போது
(ஒருமுகப்படும் போது) காதலாகிறது.

அது தன்னை சார்ந்தவர்கள் மீது வெளிப்படும்போது பாசமாகிறது.

அது சமூகத்தின் மீது வெளிப்படும்போது இனம்,மொழி,கலை,
காலாசாரப் பற்றுடையதாகிறது.

அதுவே சற்று விரிவடைய சமுதாய அக்கறையாக வெளிப்படுகிறது.
அநீதியை காணும்போது கோபமாகவும்,ஆதங்கமாகவும்,
அனுதாபமாகவும்,நையாண்டியாகவும் வெளிப்படுகிறது.

அதன் உண்மை சொரூப்பதை தன்னுள் உணரும்போது
அதுவே அனைத்துள்ளும் நிறைந்துள்ளது.
எங்கும் அதன் எல்லையற்ற தன்மையை உணரலாம்.


ஆக உலகம் அன்புமயமானது! இறைவனும் கூட அதுவே!
Download As PDF

Thursday, November 24, 2011

கடலில் வாழ்தாலும் நீரை தேடும் மீன்கள் நாங்கள்!

பொருளிலெல்லாம் மிகப்பெரிய பொருள் இறைவன்.
ஆனால் அது யாருக்கும் புலப்படுவதில்லை.
பெருங்கூச்சலிட்டு அழைப்பவன் இறைவன்.
ஆனால் அவன் அழைப்பை யாரும் கேட்பதில்லை.

மிக அருகில் இருப்பவன் இறைவன்.
ஆனால் யாரும் அவனை உணர்வதில்லை.
எல்லோர்க்கும் அவன் தன்னை பங்கிட்டுக் கொடுத்திருக்கிறான்.
ஆனால் அவன் பெயர் யாருக்கும் தெரிவதில்லை. 

உண்மைதான்....
சுவாசித்துக் கொண்டிருந்தாலும் விடும் மூச்சை மறந்தவர்கள் 
நாங்கள்!சூரியனின் பிரகாசத்தில் உலவினாலும் அவனை பற்றிய 
எந்த சுவாதினமும் இல்லை எங்களுக்கு!
கடலில் வாழ்தாலும் நீரை தேடும் மீன்கள் நாங்கள்!

உடன் இருந்தாலும் மறப்போம்,
முடிந்தால் மறுப்போம் அவன் இல்லையென்று!
Download As PDF

Friday, November 18, 2011

ஆன்ம இலக்கை அடைய சிறந்த வழி எது?


அடைவதற்கு என்று இலக்கு ஒன்றும் கிடையாது.
எதையோ பெறுவதற்கும் ஏதுமில்லை.
ஆன்மாவே நீங்கள், அதாவது, ஆன்ம சொரூபமாகவே 

நீங்கள் எப்போதும் இருந்து வருகிறீர்கள். 

ஆன்மாவைப் பற்றிய உண்மையை உறுதிப்படுத்த, '

ஆன்மாவாகவே இருக்கிறோம்' என்று உணர்வதைத் தவிர 
வேறொன்றும் சொல்வதற்கில்லை.

கடவுளை அல்லது ஆன்மாவைக் காண்பது என்றால்,
ஆன்மாவாகவே இருப்பது, அதாவது நீங்கள் உண்மையில்
உள்ளபடி இருப்புக் கொள்வதே ஆகும்.


'காண்பது' என்றால் நிலைபேறு கொள்வது. ஆன்மாவாகவே
இருக்கும் நீங்கள் ஆன்மாவை எட்டுவது எவ்வாறு என்று அறிய விரும்புகிறீர்கள்!

'உடலை நான்' என்கிற எண்ணத்தைக் கைவிடுக. புறப் பொருட்கள், 

தோற்றங்கள் பற்றிய எண்ணங்கள், அதாவது, அநாத்ம விஷயங்கள், 
யாவற்றையும் தவிர்க்கவும். புறப் பொருட்களைப் பற்றிய எண்ணங்களில் 
மனம் வெளிமுகமாக மேயத் தொடங்கும்போதே அதை நிறுத்தி மெய்யான 
நான் என்கிற உள்ளுணர்வில் - பதிய வையுங்கள்.
நீங்கள் செய்ய வேண்டிய முயற்சி இம்மட்டுமே.

மனம் முயற்சியின்றியே விருத்தியற்ற நிலையை சகஜமாக அடையும் வரையில், 

அதாவது அகங்கார-மமகாரங்கள், முற்றிலுமாக நசிக்கும் வரையில் சாதனையைத் 
தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.
Download As PDF

Monday, November 14, 2011

மனித சக்திகள் இங்கே வீணடிக்கப்படுகிறது.


இன்றைய மனிதன் தன் வாழ்நாளில் தனது அடிப்படை தேவையான உணவு,உறைவிடம் 

இவற்றிற்கே தன் நேரத்தையும்,சக்தியையும் முழுமையாக செலவழித்து விடுகிறான்.

போதாகுறைக்கு தன் குழந்தைகளின் வளர்ச்சிக்கு தன்னை
முழுவதுமாக இழந்துவிடுகிறான்.தன் சுயதேவைக்கே (சுயநலத்திற்கே) 

நேரம் முழுவதும் சென்றுவிடுவதால் பின் அவனின் சுய சிந்தனைக்கும்,
கற்பனைக்கும் நேரமேது....


ஒரு நல்ல அரசு மனிதனின் இந்த அடிப்படை தேவையை பூர்த்தி செய்தால் 

அங்கே மனித சக்திகள் வளர்க்கப்படும். மனிதனின் பொதுநல போக்கு வளரும்.
 நல்ல தரமான மனிதர்கள் தோன்றுவார்கள்.சிந்தனைகள் மேம்படும்.கலைகள் வளரும்.
அவர்களது ரசனையும் கூடும்.

நாகரீகம் வளரும்.பொற்காலம் என்பதை கண்களால் காணலாம்.
பல பொற்காலங்களை கண்ட சமுதாயம் இது.
உலகிற்கு உயரிய நாகரீகங்களை வழங்கிய நாடு இது.

இன்று வெறும் அடையாளங்களை மட்டுமே சுமந்துக் கொண்டு சவமாய் காட்சி அளிக்கிறது 

மன்னன் எப்படியோ மக்களும் அவ்வழியே என்பார்கள்.ஒரு நல்ல தொலைநோக்கு இல்லாத தலைவர்களால் சுதந்திரம் பெற்றும் நாம் இன்னும் அடிமைகளாக வாழ்கிறோம்.மனித சக்திகள் 

இங்கே வீணடிக்கப்படுகிறது.

நெஞ்சு பொறுக்குதில்லையே!!

இந்த நிலை கெட்ட மனிதர்களை நினைந்து விட்டால்..... 
Download As PDF

Friday, November 11, 2011

அனுபவம்-அனுபவிப்பவனுக்கு மட்டுமே சொந்தம்


முகத்தில் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்கு தாய்தன் மணாளனோடு ஆடிய
சுகத்தை சொல்லேன்றால் சொல்லுமாறு எங்ஙனே.


சொல்லித் தெரிவதில்லை மன்மதகலை என்பார்கள்.
சிற்றின்பத்தை பற்றி எந்த அறிவும் இல்லாவிட்டாலும்
திருமணம் நடந்தவுடன் அதன் சுகத்தை உணர ஒரு துணை
இருந்தால் போதும்.அதன் அனுபவம் அவரவருக்கு வந்துவிடும்.

அதைவிடுத்து அதை வேறு எந்த உரையாலும்,அடுத்தவரின் அனுபவத்தாலும் 
உங்களுக்கு அந்த அனுபவத்தை பெற முடியாது.

உலகியலின் சிற்றின்பத்திற்கே இந்த நிலையென்றால்
மனவாக்கிற்கு எட்டாத பேரின்பத்தை வார்த்தைகளால்
எப்படி விளக்குவது?அதற்கும் ஒரு துணை தேவை.

நான் என்று உணர்விற்கு ஆதாரமான உணர்வினை
நீங்கள் உணராதவரை ஆத்மசுகத்தை உணர இயலாது.

நான் என்னும் எண்ணமும் தோன்றி மறையும்.தோன்றி,மறைவதற்கு 
ஒரு ஆதாரம் தேவை.நீங்கள் இருப்பதினால் நினைகின்றீர்களா? 
அல்லது நினைப்பதனால் இருகின்றீர்களா?
உங்களின் இருப்பை உணர நினைக்க வேண்டியது இல்லை.

அந்த இருப்பை உணர்ந்து நிற்கும் போது நான் என்னும்
முதல் எண்ணமும் கரைந்து அது மாத்திரமாய் நிற்கும்.
இது வார்த்தைகளால் எட்டும் நிலையல்ல.அனுபவம்.
அனுபவிப்பவனுக்கு மட்டுமே சொந்தம்

Download As PDF

Thursday, November 10, 2011

இறைவனுடன் உரையாடலாம்.




இறைவனின் மொழி மௌனம்.
மனிதனின் மொழியோ வார்த்தைகளால் ஆனது.


வார்த்தைகளே உலகத்தின் அனைத்து பிரச்சனைக்கும் 
காரணம்.ஆனால் உண்மையின் மொழியோ தூய்மையானது. 
மிக்க அமைதிமயமானது.அந்த முழு அமைதியின் குரலை 
நீங்கள் ஆன்மாவின் கீதம் என்றும் அழைக்கலாம்.


நம்மில் பலரும் இந்த அமைதின் குரலை,
மனதில் சதா ஓடிக்கொண்டிருக்கும் வார்த்தைகளின் 
சத்தத்தில் இழந்திருக்கலாம்.ஆனால் அது தொடர்ந்து 
ஒலித்துக்கொண்டே இருக்கிறது.


"நான்" என்ற அகங்காரத்தின் விளைவால் அது கேட்பதில்லை.


உங்களின் உள்ளார்ந்த விழிப்புணர்வுடன் தொடர்ந்து கவனித்தால்,
நான் என்ற எண்ணத்தின் மறைவில் அந்த கீதத்தை கேட்கலாம்.
நான் என்ற எண்ணமே (அகங்காரமே) பல்வேறு குழப்பங்களையும்,
முரண்பாடுகளையும் தோற்றுவிற்கிறது. 


மனதின் கூச்சல்கள் நம் உண்மையான இருப்பின் அமைதியில் 
மறையும்வரை நாம் அதை உணர முடியாது.


வாழ்க்கையின் வெளிப்படைதன்மைகளை கடந்து,
எவரொருவர் தொடர்ந்து தன் உள்ளத்தில்அந்த அமைதியை 
தேட முயல்கிறாரோ அவர் அதன் கீதத்தை கேட்பார்.
அந்த மௌனத்தின் கீதம் தான் எல்லாவித ஞானங்களின் ஊற்றுக்கண்ணாய் இருக்கிறது.
அந்த மௌனத்தின் மொழியால் நாம் இறைவனுடன் உரையாடலாம்.
Download As PDF

Tuesday, November 8, 2011

விஷய அறிவே ஞானத்திற்கு தடை


பண்டிதர்கள்,மேதைகள்,படிப்பாளிகள் என்று அழைக்கப் 
படுபவர்கள் ஞானமடைவது என்பது மிகக் கடினமாகும்.
அப்படி ஞானம் பெற்றால் அது பேரதிசயமாகும்.

சமானியமானவர்கள் தன்மாற்றம் அடைவதற்கு சுலபமாக தயாராகி விடுகிறார்கள்.ஏனெனில் அவர்களிடம் தங்களை பிணைத்திருக்கும் தளையையும்,அறியாமையையும் தவிர இழப்பதற்கு வேறொன்றுமில்லை.

விஷய அறிவாளியோ தன்னுடைய விஷய அறிவை இழப்பதற்குப் பயப்படுகிறான்.ஏனெனில் அது அவனது விலை மதிப்பற்ற சொத்து.
அவன் அதை பாதுகாப்பதற்கு தர்க்க ரீதியான காரணங்களையும், 
சாக்கு போக்குகளையும் கண்டுபிடிக்கிறான்.அனால் உண்மையில் 
அவனது விஷய அறிவை பாதுகாப்பதன் மூலம்,அவனது 
அறியாமையையே பாதுகாக்கிறான்.

அறிவுக்கு பின்னால் ஒளிந்துக் கொள்வதே அவனது அறியாமை.
அவனது சுயமுகத்தை மறைக்கும் முகமூடி.
நீங்கள் அவனது சுய முகத்தை பார்க்கமுடியாது.
அவனாலும் அதைப் பார்க்க முடியாது.

முகமூடியை அணிந்துக் கொண்டு கண்ணாடியின் முன்னே 
நின்றுக்கொண்டு "இதுதான் என்னுடைய சுயமுகம்" என்று நினைத்துக்கொள்கிறான்.   
Download As PDF

Monday, October 31, 2011



மெய்யறிவும்,மெய்யுணர்வும் ...

அறிவு,உணர்வு என்னும் இரண்டு சொற்கள் ஒரே பொருளை 
தருவது போல காணப்படுகிறது.எனினும் சிறிது பொருள் 
வேறுபாடு உண்டு.

அறிவு என்பது பொருள்களை திட்டவட்டமாக தெரிந்துகொள்வதை 
மட்டுமே குறிக்கும்.அவ்வாறு தெரிந்துகொண்டதோடு நில்லாமல் 
தெரிந்துகொண்ட அறிவு தெரிந்துகொள்ளப்பட்ட பொருளிலேயே 
அழுந்தி அதன் வண்ணமாய் ஆகி விடுதல் உணர்வை  குறிக்கும்.
அனுபவம் என்பது இதுவே.

எனவே "அறிவு" என்பது பொருள் அறிவும்,உணர்வென்பது 
அனுபவ அறிவுமாதல் விளங்கும்.பொருள்களை அறிதலோடு 
நிற்கின்ற பொருளறிவு முழு அறிவு ஆகாது.குறை அறிவே ஆகும்.ஏனெனில் பொருளை அதனில் அழுந்தி யறியும்பொழுதே 
அதனது இயல்பு முற்றும் விளங்கும்.

அவ்வாறன்றித் தான் வேறாகவே நின்று அறியும்பொழுது 
 அதன் தன்மை முற்றும் விளங்குதல் இல்லை.
அதனால் ,அனுபவ அறிவே -அ ஃதாவது உணர்வே 
நிறையறிவாகிறது.

இது பற்றியே உண்மை ஞானம்,தமிழில் "மெய்யறிவு" 
எனப்படாமல் "மெய்யுணர்வு" எனப்படுகிறது. 

Download As PDF

Monday, October 24, 2011

உபநிஷதங்கள் வற்புறுத்துவது மேன்மையை அல்ல. முழுமையையே!




உபநிஷதங்கள் வற்புறுத்துவது மேன்மையை அல்ல.
முழுமையையே என்பதை நினைவிற் கொள்க.
பூரணத்தையே உபநிஷதங்கள் வற்புறுத்துகின்றன.
உபநிஷதங்கள் வாழ்க்கைக்கு எதிரானவை அல்ல.


அவை வாழ்க்கையை துறக்கச் சொல்லவில்லை என்பது 
முதல் விஷயம்.அவற்றின் அணுகுமுறை முழுமையானது.
வாழ்க்கை முழுமையாக வாழ்வதற்கானது.


அவை தப்பித்துக்கொள்வதை உபதேசிக்கவில்லை.
நீங்கள் இந்த உலகியலேயே வாழ்வதை,உலகியலில் 
மேலோங்கி நிற்பதை,ஆனாலும் உலகியலில் ஆழ்ந்து 
விடாமல் உலகியலில் வாழ்வதை அவை விரும்புகின்றன.


வாழ்க்கையை துறக்க வேண்டுமென்றோ,
வாழ்க்கையிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டுமென்றோ,
வாழ்க்கை அழகற்றது ,பாவமானது என்றோ அவை 
உங்களுக்கு உபதேசிக்கவில்லை.


அவை வாழ்க்கையில் மகிழ்ச்சி கொள்கின்றன.
அது இறைவனின் கொடை.
அது கடவுளின் உருவ வெளிப்பாடு. 

Download As PDF

Saturday, September 3, 2011

முதல் அடியே மிகப்பெரிய ஓட்டம்தான்...



வாழ்க்கை பயணம்.


மனிதனின் முதல் அடியே மிகப்பெரிய ஓட்டம்தான்.
மிகப்பெரிய மாரத்தான் ஓட்டத்தைவிட பெரியது.

ஓட்டத்தில் வென்ற ஒவ்வொருவரும் தான் இந்த செய்தியை படித்துக்கொண்டிருக்கிறோம்.அந்த ஓட்டத்தை ஒரு நிமிடம் நினைவு கூர்ந்தால் இந்த உலகவாழ்க்கை ஒன்றும் அவ்வளவு கடினமல்ல என்பது தெளிவாகும்.


பத்துகோடி பேர்களில் நானும் ஒருவன் கர்பவாசலில் 
அனைவரையும் கடந்து வெற்றி பெற்றே இந்த வாழ்வு பெறப்பட்டது 
என்பதை நினைக்கும்போது மிகவும் மலைப்பாக உள்ளது.

Download As PDF

Monday, August 22, 2011

சும்மா இருப்பது எப்படி?




ஒரு மடத்தில் "சும்மா இருப்பது எப்படி?"என செய்முறை விளக்கம் 
தருமாறு தன் சிஷ்யர்களுக்கு அந்த மடத்து குரு ஒரு பரீட்சை 
வைத்தார்.யார் சிறந்த விளக்கம் அளிக்கிறார்களோ அவன் 
ஞானத்தை உணர்ந்தவன் என பாராட்டி தலைமை பொறுப்பு 
அளிப்பதாக அறிவித்தார்.


எல்லா மாணவர்களும் சுறுசுறுப்பாய்,சும்மா இருப்பதற்குண்டான வழிகளை பற்றி யோசிக்க ஆரம்பித்தனர்.சிலர் பேசாமலும்,
சிலர் அசையாமலும்,சிலர் உணவு உண்ணாமலும் இருந்தனர். 
சிலர் கண்களை மூடி தியானிப்பது போன்று சும்மா இருந்தார்கள்.
இன்னும் சிலர் மலைகள்,காடுகள் என்று போய் சும்மா இருப்பதை 
செய்து காண்பித்தார்கள்.


ஆனால் ஒரே ஒரு மாணவன் மட்டும் சும்மா இருக்க எந்த முயற்சியும் 
எடுக்காமல்,தன்னுடைய வேலைகளை எப்போதும்போல செய்துக்கொண்டிருந்தான்.போட்டியின் முடிவு நாள் வந்தது.
குரு முடிவை சொன்னபோது அனைவருக்கும் அதிர்ச்சி.


எந்த முயற்சியும் எடுக்காத அந்த மாணவனுக்குத்தான் குரு 
பாராட்டி பொறுப்பை அளிப்பதாக அறிவித்தார்.இதை ஏற்காமல்,
எல்லா மாணவர்களும் குருவிடம் சென்று விளக்கம் கேட்டார்கள்.
இதற்கு குரு, 


"நீங்கள் எல்லோரும் சும்மா இருப்பதைப் பற்றி சிந்தித்துக் சிந்தித்து,
எப்படியெல்லாமோ சும்மா இருக்க முயற்சி செய்தீர்கள்...
நீங்கள் எடுத்த முயற்சியாலேயே நீங்கள் சும்மா இருக்க தவறிவிட்டீர்கள்...


ஆனால் எந்த முயற்சியும் எடுக்காமல்,அந்தந்த 
நேரத்தில் தன் முன்வரும் வேலைகளை செய்தபடி 
உண்மையாகவே சும்மா இருந்து காட்டியது இவன் மட்டுமே"
என்று கூறினார் குரு.


ஆக சும்மா இருப்பது என்பது மனதில் சும்மா இருப்பது.
மனம்,நடந்து முடிந்து போன விஷயத்திற்கும்,
இனி வரப்போகிற விஷயத்திற்கும் குழப்பமடையாமல் 
இருப்பதே சும்மா இருப்பது.

Download As PDF

Thursday, August 4, 2011

பொய்வேஷம்

ஜாதி,சேர்க்கை,குலம்,கோத்திரம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டதும்,
பெயர்,வடிவம்,குணம்,குற்றம் ஆகியவை அற்றதும்,
இடம்,காலம்,,பொருள் முதலியவற்றைக் கடந்ததும் ஆகிய
பிரம்மம் எதுவோ அதுவே "நான்" என்று புத்தியில் ஒருவன் 

இடைவிடாது சிந்தித்தல் வேண்டும்.


உலகைப் பின்பற்றிச் செல்வதைதையும்,நூல்களைப் பின்பற்றிச்
செல்வதையும்கூட விட்டொழித்து ஆத்மாவில் பொய்யாக
கற்பிக்கப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தையும் ஒழிக்கவேண்டும்.



உறக்கத்தாலும் உலக வியாபாரத்தாலும்,ஐம்புலன்களின் விஷய அனுபவத்தாலும் ஏற்படும் ஆத்மா மறதிக்கு சிறிதும் அவகாசம் கொடுக்காமல் உண்மையான 
தனது ஆத்மா சொருபத்தை இடைவிடாது சிந்தித்து தன்மேல் ஏற்றிக்கொண்ட வேஷத்தை நடிகன் களைவதுபோல்பொய்யுடலைத்
தான் என்று எண்ணுவதை விட்டுவிடவேண்டும்.
Download As PDF

Monday, August 1, 2011

முதல் கடமை


அன்பு,கருணை,கடமை,சேவை,சமூகம் என்ற பெயரால் 
உங்களை நீங்களே பலியாக்கி கொள்ளவேண்டாம்.
இவை அனைத்தும் அறியாமையால் உங்களின் அகங்காரம் வளர்வதற்கும்,மென்மேலும் கடினமாவதற்கும் மட்டுமே உதவும்.

உங்களின் முதல் கடமை உங்களின் இருப்புதன்மையை 
உணர்வதே என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.


Download As PDF

Friday, July 29, 2011

வாழ்க்கை!



இங்கே எதை "நீங்கள்" என்று கருதிக்கொண்டீருக்கீர்களோ 
அந்த அகங்காரம் போலியானது.ஒருவேளை நீங்கள் 
அந்த பொய்முகத்துடன் வாழ்வீர்களானால் உங்கள் வாழ்க்கை 
முழுதும் வீணாகிவிடும்.

உங்களின் போலியான அகங்காரத்தை விட்டு வாழ்வீர்களானால்
உண்மையின்,எதார்த்தத்தின் மணம் உங்கள் வாழ்வு முழுவதும் நிறைந்திருக்கும்.

வாழ்கைக்கு ஆரம்பமும் இல்லை.முடிவும் இல்லை.
அது எப்பொழுதும் இருப்பது,வாழ்வே இறைவன்.

அதுவே உங்களுக்கு கொடையளிக்கப்பட்டுள்ளது.
இப்பொழுது உங்களுக்கு தேவைப்படுவதெல்லாம்
விழிப்புணர்வுடன் கூடிய இருதயம் மட்டுமே!

அப்பொழுதுதான் உங்களால் அதை உணர,சுவைக்க,
ஸ்பரிசிக்க முடியும்.மேலும் அந்த வெகுமதி
உங்களுக்காகவே காத்துக்கொண்டிருக்கிறது!

ஆகவே சிந்தியுங்கள்!கருதுங்கள்!பழக்க​ப்படுத்திக்கொள்ளுங்கள்!
Download As PDF

Monday, July 25, 2011

மனித இயல்பும்,இறைவனின் இயல்பும்....

சேற்றில் புரள்வதுதான் குழந்தையின் இயல்பு.
ஆனால் அவன் அப்படியே இருக்குமாறு தாய்
விட்டுவிடுவதில்லை.அவனை கழுவி சுத்தப்படுத்துகிறாள்.



பாவம் செய்வது மனித இயல்பு.ஆனால் கருணைக் கடலான 
இறைவனோ மனிதனை அதிலிருந்து மீட்பதற்கான வழிகளையும் 
உருவாக்கி வைத்திருக்கிறான்.


மனிதன் பாவம் செய்வது நிச்சயம்.அனால் அவனை மீட்பதற்கான 
வழிகளை இறைவன் உருவாக்கி வைத்திருக்கிறார் என்பது அதைவிட 
இரண்டு மடங்கு நிச்சயம்.


இராமகிருஷ்ண பரமஹம்சர்.
Download As PDF

Wednesday, July 6, 2011

அறியப்பட வேண்டியது ஆத்மனே.



"எதை அறிய வேண்டுமோ அதை நாம் அறியாதிருக்கிறோம்.
அறியப்பட வேண்டியது ஆத்மனே."



உங்கள் ஆன்மாவுக்கு வெளியே உள்ள எல்லாவற்றுடனும்
உங்களை பிணைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.


அந்த பிணைப்பிலிருந்து விடுப்பட்டு,ஆன்மாவுடன் 
உங்களைப் பிணைத்துக் கொள்கிறபோது மெய்ப்பொருளை,
அதன் உண்மையான வடிவத்தை நீங்கள் காண்பீர்கள்.


எண்ண அலைகளும்,அகந்தை உணர்வும் இருக்கிறவரை மனிதன் தன்னுடைய உண்மையான சுயத்தை அறிய முடிவதில்லை.எண்ண அலைகளை அகந்தை உணர்வுடன் அடையாளப்படுத்திக் கொள்ளும் நிலை தடுக்கப்பட வேண்டும்.

Download As PDF

Sunday, June 26, 2011

அறிவும் அறியாமையும்



மனிதனின் அறியாமையே அவன் தன்னை 
தன் எண்ணங்களுடன் சேர்த்து அறிவதுதான்.


அவன் தன்னை எண்ணங்களிலிருந்து விலக்கி தன்னை 
தனித்து உணர்வதே தனது இயல்பு நிலை,இவ்வாறு தன் 
உண்மை சொரூபத்தை அறிவதே ஞானம்,தன்னை அறிதல்,
சுதந்திரம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.




Download As PDF

Saturday, June 18, 2011

பெரிய துறவி


கடவுள் நம்பிக்கை சிறிதும் இல்லாத பணக்காரர் 

ஒருவருக்கு இராமகிருஷ்ண பரமஹம்சருடன் 
உரையாடும் வாய்ப்பு கிட்டியது.

பேசிக்கொண்டிருக்கும்போது "சுவாமி தாங்கள் 

கடவுளுக்காக தாங்கள் வாழ்க்கையை துறந்து விட்டீராமே"என்றார்.அதற்கு சிரித்தமுகத்துடன்,
"நான் துறவிதான்.ஆனால் என்னைவிட பெரிய துறவி 
நீதான்" என்றார். இராமகிருஷ்ணர்.

அவரின் பதிலை கேட்ட செல்வந்தருக்கு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது போலானது.
திகைப்பு மேலிட,"என்ன சுவாமி சொல்கிறீர்கள்?உங்களைவிட நான் பெரிய துறவியா?" என்று கேட்டார்.
Download As PDF

சிறந்த வாழ்க்கை


உற்றார் உறவினரிடம் தாட்சண்யத்துடனும்,
உறவினர் அல்லாத மற்றவரிடம் தயையுடனும்,
மதிகேடர்களிடம் தந்திரமாகவும்.
பண்புள்ளவர்களிடம் அன்பாகவும்,
ஆட்சியாளர்களிடம் நீதியுடனும்,
கற்றறிந்த பண்டிதர்களிடம் தன்னடக்கத்துடனும்,
எதிரிகளிடம் தைரியத்துடனும்,
பெரியவர்களிடம் பொறுமையுடனும்,
பெண்களிடம் மதிநுட்பத்துடனும் இருக்கும் 
மிகத் திறமையான மனிதர்களால் தான் 
வாழ்க்கை சிறப்பானதாக அமையும்.


                                                    -பிருகத்ஹரி நீதி.


Download As PDF

உள்ளதை சொல்கிறேன்


பொறுமையிலும் உயர்ந்த தவமில்லை.
திருப்தியிலும் உயர்ந்த இன்பமில்லை.
ஆசையிலும் பெரிய தீமையில்லை.
கருணையிலும் பெரிய அறமில்லை.
மன்னித்தலிலும் ஆற்றல் மிக்க ஆயுதமில்லை.

Download As PDF

Thursday, June 16, 2011

நிம்மதி இழப்பது எதனால்?

ஒரு துறவி இருந்தார்.அவரிடம் பணக்காரர் ஒருவர் வந்தார்.
சுவாமி,என்னிடம் நிறைய செல்வமிருந்தும் நிம்மதி இல்லை.
என்ன காரணம் என்பது புரியவில்லை? என்று கேட்டார்.
அதற்கு துறவி பதில் சொல்லவில்லை. 

அங்கே விளையாடிகொண்டிருந்த குழந்தை ஒன்றை அருகே அழைத்தார்.அதன் கையில் ஒரு மாம்பழத்தை கொடுத்தார்.குழந்தை அதை தன்னுடைய ஒரு கையால் வாங்கிக்கொண்டது.அடுத்து ஒரு பழத்தை கொடுத்தார்.

அதையும் இன்னொரு கையால் வாங்கிக்கொண்டது.மீண்டும் ஒரு பழத்தை கொடுத்தார்.தன்னுடைய ஒருகையால் இருபழங்களையும் மார்போடு அணைத்துக்கொண்டு மூன்றாவது பழத்தையும் பெற முயற்சித்தது.
Download As PDF

பற்று.


ஒரு ஊரில் துறவி ஒருவர் இருந்தார்.அவரிடம் பலபேர் சீடர்களாக இருந்து தனக்கு ஏற்படும் ஐயங்களை கேட்டு 

தெளிவு பெற்றனர்.ஒருநாள் ஒரு சீடன் அவரிடம் 
"ஐயா.பற்றுகளை விட்டால்தான் இறைவனை அடைய முடியுமா?பற்றுகளை வைத்துக்கொண்டே நாம் முயற்சி 
செய்து இறைவனை அடைய முடியாதா?"என்று கேட்டான்.

 

Download As PDF

Wednesday, June 15, 2011

மிக உயர்ந்தவர்கள்.


ரு விஷயத்தை தெரியாதவர்களைவிட தெரிந்தவர்கள் உயர்ந்தவர்கள்.விஷயத்தை தெரிந்தவர்களைவிட மனதில் பதிந்தவர்கள் உயர்ந்தவர்கள்.மனதில் பதிந்தவர்களைவிட விஷயத்தை புரிந்துக்கொண்டவர்கள் உயர்ந்தவர்கள்.
புரிந்துகொள்பவர்களைவிட அவற்றை செயல்படுத்துபவர்கள் 
மிக உயர்ந்தவர்கள்.

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
Download As PDF

Sunday, June 12, 2011

மூன்று குற்றங்கள்.


வியாசர் தான் செய்த மூன்று குற்றங்களுக்காகத் தன்னை மன்னிக்கும்படி இறைவனிடம் வேண்டினார்.
என்ன அந்த மூன்று குற்றங்கள்?

அவர் வேண்டுதல்:
1.இறைவனே,நீங்கள் உருவமற்றவர்,ஆனால் எனது தியானத்தில் 
   நான் உங்களை உருவம் கொண்டவராகப் பாவித்து தியானம் செய்கிறேன்.
 
2."நீங்கள் வாக்கிற்கும்,மனதிற்கும் எட்டாதவர்."ஆனால் உங்கள் மீது தோத்திரங்கள் பாடியுள்ளேன்.
 3."நீங்கள் எங்கும் வியாபித்திருப்பவர்."ஆனால்,நானோ பல 
Download As PDF

Thursday, June 9, 2011

உடம்புனுள் உத்தமனைக் காண்.


நமது உடலின் அமைப்பை நன்கு கூர்ந்து கவனித்தால் அது இந்த உலகை
மிக நேர்த்தியாக தொடர்பு கொள்ள வடிவமைக்கபட்டுள்ளதை காணலாம்.
இந்த உடலை கொண்டே  இவ்வுலகத் தொடர்பு.

"உயிருக்கு உறுகண் செய்யாமை" என்பது பிற 
உயிருக்கு செய்வதுமட்டுமன்றி தன் உயிர்க்கும் உறுகண் 
செய்யாதிருத்தல் வேண்டும்.

நாக்கு செத்துவிட்டது என்றால் நாக்கின் உயிராகிய சுவை குன்றிவிட்டது என்று பொருள்.அதுபோல் கண்.காது,மூக்கு,சரீரம்,நாக்கு மற்றும் மனதிற்கு அதனதன் உயிராகிய பார்வை,கேள்வி,மணம்,தொடுஉணர்வு மற்றும் 
எண்ணம் ஆகியவையே ஆருயிர் என்றழைக்கப்படுகிறது.

Download As PDF

Wednesday, June 8, 2011

இறைவன் இருக்கிறானா?




ஒரு பெரியவர் தனிமையான இடத்தில் அமர்ந்து இறைவனை தியானித்துக் 
கொண்டிருந்தார்.அவரைக் கண்ட ஒரு இளைஞன் அவரருகே சென்றான்.
ஐயா தங்கள் என்ன செய்துக்கொண்டு இருக்கிறீர்கள்?என்பதை 
நான் அறிந்துகொள்ளலாமா?என்று கேட்டான்.

அதற்கு அவர்,இளைஞனே!!
"அனைத்திற்கும் ஆதாரமாய் விளங்கும் இறைவனுடன் இரண்டற 
கலக்க முயன்றுக் கொண்டிருக்கிறேன்"என்றார்.
உடனே அவன், 
Download As PDF

Saturday, May 28, 2011

இறைவனுக்கு அளிக்கும் ஒரே பரிசு.



மனிதனுடைய அன்புதான் அவன் இறைவனுக்கு அளிக்கும் ஒரே பரிசு.
மனிதனை சோதிப்பதற்காகவே முழுப்படைப்பும் திட்டமிடப்பட்டுள்ளது.

உலகில் நம்முடைய நடத்தையின் முலம் இறைவனை விரும்புகிறோமா?
அல்லது அவனுடைய பரிசுப் பொருள்களை விரும்புகிறோமா? என்பதை 
நாம் வெளிப்படுத்துகிறோம்.

நீங்கள் எல்லாவற்றையும் விட இறைவனைத்தான் விரும்பவேண்டும் 
என்று அவன் உங்களிடம் கூறமாட்டான்.ஏனெனில் எந்தவிதமான தூண்டுதலும் இல்லாமல் உங்களுடைய அன்பு 
நிபந்தனையின்றி கொடுக்கப்படவேண்டும், 
என்று அவன் விரும்புகின்றான்.

இந்த பிரபஞ்ச லீலையின் முழு ரகசியமும் இதுதான்.நம்மை படைத்தவன் 
நம் அன்பிற்காக ஏங்குகிறான்.அவன் கேட்காமலேயே நாமாகவே 
முன்வந்து அதை அளிக்க வேண்டும் என அவன் விரும்புகிறான்.
நீ விரும்பி அழிக்காவிடின்அவன் அதை ஏற்கமாட்டான்.

இந்த உலகப்பந்தில் ஊர்ந்து செல்லும் சிறுமனிதர்களாக,
இறைவனது பரிசுப் பொருள்களுக்காக மட்டுமே அழுதுக்கொண்டு,
பரிசளிப்பவனை மறந்துவிட்ட வழிதடுமாறிய குழந்தைகளாக 
இருக்கும்வரை துன்பத்திலிருந்து மீள வழியில்லை. 
Download As PDF

Friday, May 27, 2011

உண்மை அறிய அறிவு ஒரு தடையே!



உண்மையைத் தேடுவதற்கு,பாதை ஒன்றும் கிடையாது.
நீங்கள் புதிதாக ஒன்றை கண்டுபிடிக்க எண்ணும்போது,
எதைப்பற்றியேனும் தெரிந்து கொள்ள சோதனை செய்யும்
போது உங்கள் மனம் அமைதியாக மட்டுமல்ல,
வெறுமையாகவும் இருக்க வேண்டும்.

உங்கள் மனம்,புள்ளிவிவரங்கள்,ஒரு விஷயத்தைப் பற்றிய
அறிவு ஆகியவற்றால் நிரப்பப்பட்டிருந்தால் அவை புதியதைக்
கண்டுபிடிப்பதற்கு தடையாக விளங்கும்.

(என்னதான் நீர் தூய்மையாக இருந்தாலும் பாத்திரத்தில் உள்ள 

அழுக்கு அதை அசுத்தமாக்கி விடுவதுபோல).
Download As PDF

அன்பு வலையில் அகப்படும் ஆண்டவன்.


இறைவனை அடைந்த நாயன்மார்களின் வரலாற்றை பார்த்தால் அவர்கள் அவன்பால் கொண்ட அன்பாலே இறைவனை

அடைந்தனர் என்பதை அறியலாம்.

பூஜை,புனஸ்காரங்கள் இன்றி தன் அன்றாட வாழ்கையை மிக எளிமையாய் தங்களால் இயன்ற செயல்களை செய்துக் கொண்டு 

அன்பு ஒன்றையே அவன்பால் செலுத்தி இறையடியை அடைந்தனர்.

அதிபத்தர் ஒரு மீனவர்.தன் வலையில் அகப்படும் முதல் மீனை 
இறைவனுக்கு அன்புக்காணிக்கையாக அளிப்பதை 
வழக்கமாக கொண்டிருந்தார்.



கடுமையான பஞ்சத்திலும் தனக்கு கிடைத்த ஒரு மீனையும் இறைவனுக்கு காணிக்கையை
Download As PDF

Thursday, May 26, 2011

அறிந்தவை ஒரு சுமையே!



நீங்கள் புதிதாக ஒன்றை அறிய ஆவல் கொண்டால்
அதற்கான பயணத்தை நீங்களாகவே மேற்கொள்ள வேண்டும்.

அப்பயணத்தில் முக்கியமாக முன்பே சேகரித்து
வைக்கப்பட்ட அறிவு முழுமையாக துறக்கப்பட்டிருக்க வேண்டும்.


ஏனெனில் அறிவின் மூலமாகவும்,நம்பிக்கையின் மூலமாகவும்,
அனுபவங்களை பெறுதல் எளிது.ஆனால் அத்தகைய அனுபவங்கள் நம் 
மனோபிம்பங்களின் விளைவே.
                                                       எனவே அவை முற்றிலும் நிஜமற்றது.......பொய்.

நீங்கள் புதிதாக ஒன்றை அறிய வேண்டுமெனில்,பழமையின் சுமையை,

Download As PDF

Wednesday, May 25, 2011

ஞானப்பழம் நீயே!



கொய்யக்கூடிய கனியை ஏன் "கொய்யா கனி" ?
என்று பெயரிட்டனர் என்று சிந்திப்பதே அறிவுடைமை ஆகும்.
நாம் இவ்வாறு சிந்தித்து கேள்வி கேட்பதற்கே 
இது மாதிரியான பெயர்களை சான்றோர்கள் இட்டிருக்கிறனர்.

பட்டினத்தார் பாடலில்
 
“வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம் வேறொருவர்க்
கெட்டாத புட்பமிறையாத தீர்த்தமினி முடிந்து
கட்டாத லிங்கங் கருதாத நெஞ்சங் கருத்தினுள்ளே
முட்டாத பூசை யன்றோ குருநாதன் மொழிந்ததுவே.”


என்பதில் வேறு ஒருவருக்கும் "எட்டாத புட்பம்"
என்ற வார்த்தை உள்ளதல்லவா! பூவே எட்டாது 
எனில் அதிலிருந்து வெளியாகும் கனி எப்படி எட்டும்?
                                                        மாம்பழம்,நாவல்பழம்,எழுமிச்சைபழம்,பலா,வா
ழை,பேரிட்சை,
திராட்சை,மாதுளை,கமலா,சீதா போன்ற பலபெயர்கள் அந்தந்த பழதிற்குரியதா?என்று சிந்தித்துபாருங்கள்.

உ.தா:எழும்+இச்சை+பழம்=எழுமிச்சை பழம்.
இச்சை இந்த பழத்திலா எழுகிறது?
பின் இச்சை எழும் இடம் எங்கே உள்ளது?

பேரிட்சை பழத்தில் தங்களுக்கு அப்படி என்ன 
பெரிய இச்சை?

மாதுளையில் ஒரு சிறு துவாரம் கூட 
காணவில்லையே?பின் மா துளை என்றால்?

இவை அனைத்தும் ஒன்றை சுட்டிக்காட்டவே 
இவ்வாறு பெயரிடப்பட்டிருக்கின்றன.அனைத்தும் 
சிந்தித்து கேள்வி கேட்கவே.

நண்பர்களே!
தங்களின் அறிவை சோதிப்பதல்ல என் நோக்கம்.தெரிந்ததை 
தங்களுடன் பகிர்ந்துக் கொள்வே அடியேனின் இச்சிறு முயற்சி.

"சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?"எனக் 
கேட்ட சிறுவன்,பின்அப்பழதில் உள்ள மண்ணை ஊதியதற்காகக் 
"என்ன அவ்வையே பழம் சுடுகிறதா?" என கேட்டால் 
அந்த விளக்கத்தை அவ்வை ஏற்றுக் கொண்டிருப்பாரா?

உண்மையில் "சுடுகின்ற பழத்தை" அல்லவா காட்டி இருக்கவேண்டும்.
நாவல் கனிகல்லவா விளக்கம் தந்திருக்க வேண்டும்?
விளக்கம் தந்தது தமிழ் கடவுளல்லவா?
பொய்யான விளக்கத்திற்கு அவ்வை செவி சாய்திருப்பாளா?

பழமையான வார்த்தைகளெல்லாம் பழமொழியாகிவிடாது.
மெய்ஞானப் பழத்திலிருந்து வெளியானவையே பழமொழிகள்.
அவையே கனி மொழியாகும்.

கனிந்த என்றால் நன்கு பக்குவப்பட்டு முதிர்ந்த பொருள் 
என்று பொருள்படும்.ஞானமெனப்பட்ட அறிவும் முற்றறிவாகும்.
முதிர்ந்த முற்றறிவு என்பதற்கே அது கனியுடன் ஒப்பிடப்பட்டது.


திருவிளையாடல் புராணத்தில்-


எவருக்குமே கிடைக்காத(எளிதில் அடையதக்கதன்று) 
ஞானம்
(அறிவு/பழம்)ஒன்றுள்ளது.அது இரண்டாக பகுக்க முடியாதது.
(நீ வேறு!அது வேறு என்று பிரிக்க முடியாதது).

அதை இந்த உலக அறிவால் (கண்,காது,மூக்கு,நாக்கு,மெய்,மனம் 
கொண்டு அறியப்படும் அறிவால்)அறிய இயலாது.

முதல் பொருளாய் உதித்த "நான்" என்னும் உணர்விற்கு ஆதாரமாய் 
விளங்கும் சத்து,சித்தான(பேரிருப்பும்,பேரறிவுமான/சிவசக்தியான/
அம்மையப்பரான)திருவருளில் இருந்தே அதை இருந்துணர வேண்டும்.

அந்த ஞானம் வெளியில் உள்ளதன்று.
நீயே அதுவாய் விளங்குகிறாய் என்பதே பழம் நீ( பழனி).


அறிவு வடிவென் றறியாத என்னை
அறிவு வடிவென் றருள்செய்தான் நந்தி
அறிவு வடிவென் றருளால் அறிந்தேன்
அறிவு வடிவென் றறிந்திருந் தேனே.


தலையை "கொய்தான்" என்றால் தலை வேறு முண்டம் வேறாக 
பிரித்துவிட்டான் என்று பொருள்.ஆனால் உன்னிலிருந்து அறிவை 
தனியே பிரிக்க முடியாது!ஏனெனில் நீயே அறிவாய் விளங்குவதால்!

எவருக்கும் எட்டா கனி அறிவாதலால் 
அதுவே கொய்யா கனியாகும்.


Download As PDF