Monday, August 22, 2011

சும்மா இருப்பது எப்படி?




ஒரு மடத்தில் "சும்மா இருப்பது எப்படி?"என செய்முறை விளக்கம் 
தருமாறு தன் சிஷ்யர்களுக்கு அந்த மடத்து குரு ஒரு பரீட்சை 
வைத்தார்.யார் சிறந்த விளக்கம் அளிக்கிறார்களோ அவன் 
ஞானத்தை உணர்ந்தவன் என பாராட்டி தலைமை பொறுப்பு 
அளிப்பதாக அறிவித்தார்.


எல்லா மாணவர்களும் சுறுசுறுப்பாய்,சும்மா இருப்பதற்குண்டான வழிகளை பற்றி யோசிக்க ஆரம்பித்தனர்.சிலர் பேசாமலும்,
சிலர் அசையாமலும்,சிலர் உணவு உண்ணாமலும் இருந்தனர். 
சிலர் கண்களை மூடி தியானிப்பது போன்று சும்மா இருந்தார்கள்.
இன்னும் சிலர் மலைகள்,காடுகள் என்று போய் சும்மா இருப்பதை 
செய்து காண்பித்தார்கள்.


ஆனால் ஒரே ஒரு மாணவன் மட்டும் சும்மா இருக்க எந்த முயற்சியும் 
எடுக்காமல்,தன்னுடைய வேலைகளை எப்போதும்போல செய்துக்கொண்டிருந்தான்.போட்டியின் முடிவு நாள் வந்தது.
குரு முடிவை சொன்னபோது அனைவருக்கும் அதிர்ச்சி.


எந்த முயற்சியும் எடுக்காத அந்த மாணவனுக்குத்தான் குரு 
பாராட்டி பொறுப்பை அளிப்பதாக அறிவித்தார்.இதை ஏற்காமல்,
எல்லா மாணவர்களும் குருவிடம் சென்று விளக்கம் கேட்டார்கள்.
இதற்கு குரு, 


"நீங்கள் எல்லோரும் சும்மா இருப்பதைப் பற்றி சிந்தித்துக் சிந்தித்து,
எப்படியெல்லாமோ சும்மா இருக்க முயற்சி செய்தீர்கள்...
நீங்கள் எடுத்த முயற்சியாலேயே நீங்கள் சும்மா இருக்க தவறிவிட்டீர்கள்...


ஆனால் எந்த முயற்சியும் எடுக்காமல்,அந்தந்த 
நேரத்தில் தன் முன்வரும் வேலைகளை செய்தபடி 
உண்மையாகவே சும்மா இருந்து காட்டியது இவன் மட்டுமே"
என்று கூறினார் குரு.


ஆக சும்மா இருப்பது என்பது மனதில் சும்மா இருப்பது.
மனம்,நடந்து முடிந்து போன விஷயத்திற்கும்,
இனி வரப்போகிற விஷயத்திற்கும் குழப்பமடையாமல் 
இருப்பதே சும்மா இருப்பது.

Download As PDF