Wednesday, June 8, 2011

இறைவன் இருக்கிறானா?




ஒரு பெரியவர் தனிமையான இடத்தில் அமர்ந்து இறைவனை தியானித்துக் 
கொண்டிருந்தார்.அவரைக் கண்ட ஒரு இளைஞன் அவரருகே சென்றான்.
ஐயா தங்கள் என்ன செய்துக்கொண்டு இருக்கிறீர்கள்?என்பதை 
நான் அறிந்துகொள்ளலாமா?என்று கேட்டான்.

அதற்கு அவர்,இளைஞனே!!
"அனைத்திற்கும் ஆதாரமாய் விளங்கும் இறைவனுடன் இரண்டற 
கலக்க முயன்றுக் கொண்டிருக்கிறேன்"என்றார்.
உடனே அவன், 
"ஐயா கடவுள்,கடவுள் என்று கூறுவது மூடத்தனம்,
"கடவுளை நீங்கள் கண்ணால் கண்டிருக்கிறீர்களா?"என்று கேட்டான்.

"தம்பி காண முயல்கிறேன்"

"கடவுளின் குரலை காதால் கேட்டுருக்கிறீர்களா?"

"இல்லை."

"இல்லாத ஒன்றை இருப்பதாக கற்பனை செய்துக்கொண்டு 
அரிய நேரத்தை வீணடிக்கிறீரே?"

"தம்பி உன் சட்டைப் பையில் என்ன உள்ளது?"

"இது தேன் பாட்டில்."

"அப்பா,தேன் இனிக்குமா?,கசக்குமா?"

"இது தெரியாதா?இனிக்கும்"

"தம்பி இனிக்கும் என்றாயே!அந்த இனிப்பு என்பது கருப்பா,சிவப்பா?"

"ஐயா,தேனின் இனிமையை எப்படி சொல்வது?
இதை கண்டவனுக்கு தெரியாது,உண்டவனே உணர்வான்."

பெரியவர் புன்முறுவல் பூத்தார்.

"அப்பா,இந்த பௌதிகப் பொருளாக,ஜட பொருளாக உள்ள 
தேனின் இனிமையையே உரைக்க முடியாது.உண்ணடவனே 
உணர்வான் என்கிறாயே?ஞானப் பொருளாக,அனுபவப் பொருளாக விளங்கும் இறைவனும் அப்படித்தான்.அவரவர் சொந்த அனுபவத்தில்தான் உணர்தல் வேண்டும்" என்றார்.

இதையே திருமூலரும் 

அவனும் அவனும் அவனை அறியார்
அவனை அறியில் அறிவானும் இல்லை
அவனும் அவனும் அவனை அறியில்
அவனும் அவனும் அவனிவன் ஆமே.

நான் அறிந்து அன்றே இருக்கின்றது ஈசனை
வான்அறிந் தார் அறியாது மயங்கினர்
ஊன்அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்
தான்அறி யான்பின்னை யார்அறி வாரே?

முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்கள்
அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய
சுகத்தைச் சொல்லென்றால் சொல்லுமாறு எங்ஙனே!
என்றுரைக்கிறார்.
   


Download As PDF

4 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

நல்லதொரு பதிவு

முனைவர் இரா.குணசீலன் said...

கோயிலாவது ஏதடா ? குளங்க ளாவது ஏதடா ? கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே. கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே ...

முனைவர் இரா.குணசீலன் said...

வார்த்தைகளுக்கள் அடங்காதது கடவுள் தன்மை.

உருவங்களுக்குள் அடங்காதது கடவுள் தன்மை.

சடங்குகளுக்குள் அடங்காதது கடவுள் தன்மை.

எங்கும் நிறைந்தது கடவுள் தன்மை.

அதன் பெயர் அன்பு!!!!

சமுத்ரா said...

நல்ல பதிவு